தமிழகத்தில் வேட்டி கட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது எப்படி? - Go General

Education, General tips and Health tips

Monday 5 March 2018

தமிழகத்தில் வேட்டி கட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது எப்படி?


தமிழகத்தில் வேட்டி கட்டும் பழக்கம் 

நடைமுறைக்கு வந்தது எப்படி?

தமிழர்களின் மரபு உடை - வேட்டி !


தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டியின்
முழுவிவரத்தையும் இங்கு காண்போம்.

வேட்டி எப்படி உருவானது?

முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நாகரிக முறையில் வாழத் துவங்கியவுடன் செடிகொடிகளிலுள்ள இலை மற்றும் தழைகளை ஆடையாக உடுத்த ஆரம்பித்தனர். காலப்போக்கில் நூல் இழைகள் உருவான பிறகு வேட்டி மற்றும் சிறு வடிவிலான துணிகளை நெய்து உடுத்தத் துவங்கியுள்ளனர். உலகளவில் முதலாம் நூற்றாண்டு முதலே வேட்டியை உடுத்த ஆரம்பித்துள்ளனர் என்பதும் சிற்பங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி வேட்டிக் கட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது?

அந்தந்த நாட்டில் நிலவும் தட்ப வெப்பம், சூழல், பண்பாடு, தொழில் முறை முதலியவற்றை குறிக்கும் விதமாக உடை நெய்யப்படுகின்றன. அப்படி தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ற உடையாக வேட்டி இருந்தமையால், வேட்டியை உடுத்த துவங்கியுள்ளனர் பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள்.

துவக்கத்தில் அரசர்களும், புலவர்களும், அந்தணர்களும் மட்டுமே வேட்டியை உடுத்தியுள்ளனர். காலப்போக்கில் தமிழர்களின் பாரம்பரிய உடையாக மறுவியுள்ளது வேட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் வேட்டி காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. காழகம் என்பதற்கு அரையில் கட்டப்பெறும் ஆடை என்பது பொருள். மேலும் வேட்டி பர்மாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தது என்றும் கூறப்படுகின்றது.

வேட்டியின் வகைகளும் - அணியும் முறையும் :

தற்போது நான்கு முழம், எட்டு முழம் மற்றும் கரை வேட்டி போன்ற வேட்டிகள் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செவ்வக வடிவில் உள்ள வேட்டியை வயிறு மற்றும் அதற்கு கீழுள்ள உடல் பகுதியை மறைக்கும் விதமாக உடுத்தி வருகின்றனர் தமிழர்கள். வெள்ளை நிறங்களில் மட்டுமே உருவாக்கப்பட்ட வேட்டிகள் தற்போது பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும் பட்டு வேட்டி, பருத்தி வேட்டி, பாலிஸ்டர் வேட்டி என பல்வேறு ரகங்களில் வேட்டிகள் தயாரிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் வேட்டியோடு அணியப்படும் மற்ற உடைகள் :

துவக்கத்தில் தமிழர்கள் வேட்டியோடு மேல் துண்டு அணிவதை மரபாக கடைப்பிடித்து வந்துள்ளனர். மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் கால்பதித்த பின்னர் வேட்டிக்கு மேலே மேல் சட்டையையும் அதன் மேல் துண்டையும் தற்போது அணிந்து வருகின்றனர். 

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் வேட்டியின் நிலை :

விழாக்காலங்களில் மட்டுமே வேட்டி உடுத்துவதற்கேற்ற உடை என்ற நிலை தற்போது தமிழகத்தில் மாறத் துவங்கியுள்ளது. அண்மை காலமாக பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் வேட்டியைக் கட்டத் துவங்கியுள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் வேட்டியை உடுத்த முன்வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசாங்கம் வேட்டி தினத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் பயன் பெறுவர். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நெய்யப்பட்ட கதறாடையில் வேட்டியும் முக்கிய அங்கம் வகித்தது. மொத்தத்தில் வேட்டி தமிழர்களது பாரம்பரிய உடை மட்டுமின்றி இந்திய திருநாட்டின் பாரம்பரிய உடை ஆகும்.

No comments: